தைப்பொங்கல் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா.



         "தை பிறந்தால் வழி பிறக்கும்"  

(ஆ.நிதாகரன்) தைப்பொங்கல் என்பது
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால்
 இலங்கை, இந்தியா மலேசியா ,
சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் ,
வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என
தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும்
சூரியனுக்கும் , மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் வாழும் இந்துக்களால் 
எதிர்வரும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 14-01-2018 ஞாயிற்றுக் கிழமை தைப்பொங்கல் பண்டிகை  கொண்டா டப்படுகின்றது.
பொங்கல் பண்டிகையில் பொங்கல் பானை வைக்கும் நல்ல நேரம் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம் அல்லது 11 முதல் 12 மணிக்கு குரு ஓரையில் வைக்கலாம்.

காலை 10 முதல் 11 வரையிலும், 12 முதல் 1.30 வரை நேரம் நன்றாக இல்லை. இந்த நேரத்தினை தவிர்த்து மற்ற நேரங்களில் பண்டிகை வழி பட நல்லது.


வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது என்ற வரலாற்று கதை அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகின்றது.

பொங்கலன்று அதிகாலை எழுந்து நீராடுவர். வீட்டு முற்றத்தில் சாணத்தினால் பெரியதொரு வட்டமிடுவர். அதில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் , கரும்பையும்  காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள்
.
பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.