தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார் வெள்ளிமலை –சுயேட்சையாக செயற்பட தீர்மானம்?

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்துசெயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சிக்காக 1965ஆம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றிவந்ததாகவும் இன்று தன்னை அந்த கட்சி புறந்தள்ளிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக உழைத்தவர்கள் புறந்தள்ளப்பட்டு பணம் படைத்தவர்களுக்கும் மண் கொள்ளையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாமர மக்களை கருவேற்பிலைபோல் பயன்படுத்திவிட்டு பணம் படைத்தவர்களையும் கல்விமான்களையும் வளப்படுத்துவது பொறுத்தமற்றது என்பதுடன் வாக்களித்த மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளையின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நான் 1965ஆம் ஆண்டிலிருந்து தமிழரசுக் கட்சியின் தொண்டனாக இயங்கி இற்றைவரை தமிழ்த் தேசியத்திற்காக எனது குடும்பத்தை அர்ப்பணித்தவன் என்ற வகையில் தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் முன்னாலும் தமிழ்த் தேசியம் ஒன்றுபடவேண்டும் என உரக்க குரல் கொடுத்தவன் என்ற வகையிலும் பாடுபட்டு வந்தேன்.

ஆனால் தற்போதைய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் மேலும் ஒருசிலரும் இணைந்து என்னை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி வருமாறும் அக்கடிதத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கூறியதற்கு அமைவாக முதலாம் மாதம் பதினைந்தாம் திகதி அக்கடிதத்தை ஒப்படைத்தேன்.

அவ்வேளையில் பொதுச் செயலாளர் ஊடாக தமிழரசுக் கட்சியின் 25 விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது.  அப்படிவத்தை 15ஆம் திகதி கொண்டுவருவதற்காக அனுமதி கேட்டிருந்தேன். அன்றைய தினம் கொழும்பிற்கு செல்லவிருப்பதாகவும் படிவத்தை அதற்குப் பின்னர் கொண்டுவருமாறும் பொதுச் செயலாளர் என்னிடம் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாம் மாதம் 16ஆம் திகதி, மூன்றாம் மாதம் 24ம் திகதி என ஒன்பதாம் மாதம் வரை என்னையும் எனது ஆதரவாளர்களையும் தொடர்ந்து ஏமாற்றிய பின்னர் தொகுதி ரீதியாக தேர்தல் நடைபெறவிருக்கின்றபடியால் உங்களை எமது கட்சியினுள் உள்வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது என பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார்.

எனது கட்சியிலிருந்து என்னை விலகிவருமாறும் கடிதத்தை ஒப்படைக்குமாறும் கூறி கடிதத்தை வாங்கி பதினொரு மாதங்கள் என்னை ஏமாற்றிய பின்னர் என்னிடம் இப்படி கூறுவது தலைமைத்துவத்திற்கு பொருத்தமான நடவடிக்கையா என நான் கேட்டபோது இக்கால சூழலில் உங்களை உள்வாங்க முடியாதுள்ளது, நீங்கள் மாற்று வழியை நாடுங்கள் என பொதுச் செயலாளர் கூறினார்.

ஆகவே பதினொரு மாதங்கள் ஏமாற்றப்பட்ட பின்னர் கட்சியிலிருந்து விலக வேண்டும், அதன் பின்னர் என்னை நம்பியுள்ள மக்களை வளம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுயேச்சைக்குழுவாகுதல் அல்லது தனிப்பட்ட கட்சிகளோடு இணைந்து செயற்பட முடிவெடுத்துள்ளேன். பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்து செயற்படும் எண்ணம் எனக்கில்லை. தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு 1965ஆம் ஆண்டிலிருந்து பாடுபட்ட நான் தொடர்ந்தும் பாடுபடுவேன். தமிழரசுக் கட்சிபோன்று நான் யாருடைய மனதையும் நோகடிக்காமல் அனைவரது அரவணைப்போடும் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக உழைப்பேன்.

என்னை ஏமாற்றிய தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி விட்டேன் என்பதையும் எதிர்வரும் காலங்களில் என்னை நம்பியிருக்கின்ற மக்களுக்கு நான் மரணிப்பதற்கு முன்னர் என்னாலான அனைத்து உதவிகளையும் அரசியலூடாக செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எனது நோக்கத்தையும் மக்களின் வேண்டுகோளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற அவாவுடன் தான் நான் வெளியேறுகின்றேன். சுயேட்சையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன்.

தமிழ்த் தேசியத்தை வளர்த்தவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற பாமர வர்க்கத்தை சேர்ந்தவர்களே தவிர தனவந்தர்களோ கல்விமான்களோ அல்ல. வடக்கு கிழக்கில் 85சதவீதத்திற்கும் மேல் வாழ்கின்ற மக்கள் பாமர மக்களாகும். அந்த மக்களே தமது வாக்குகள் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் பிரதேசசபை உறுப்பினர்களையும் உருவாக்கினார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் தனவந்தர்களுக்கும் கல்விமான்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் மண் கொள்ளையர்களுக்கும் பணத்தை காட்டி ஆசனம் கேட்கின்றவர்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நியமனம் வழங்கப்பட்டு பொய்யான கையெழுத்துகள் எடுக்கப்பட்டதாகவும் ஏழுபேர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியதாகவும் வானொலி மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்தேன். இது மனவேதனைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களை வழிநடத்துகின்றவர்களென தங்களை தாங்களே கூறிக்கொண்டிருக்கின்ற தலைவர்கள் தாங்கள் வாழ்வதற்காக மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும். பாமர மக்களை கறிவேப்பிலைபோல உபயோகித்துவிட்டு தனவந்தர்களையும் கல்விமான்களையும் வளப்படுத்துவது வருங்காலத்திற்கு பொருத்தமற்றது.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசியமும் தமிழர் ஒற்றுமையும் மலரவேண்டுமாயின் வாக்களித்த பாமர மக்களை மக்களாக கருத வேண்டும். மக்களின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை கடவுளாக மதித்துவிட்டு வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற பின்னர் தனவந்தர்களையும் கல்விமான்களையும் வளம்பெறச் செய்கின்றனர்.

தமிழ் மக்கள் கல்வி,கலாசாரம்,பொருளாதாரம்,பண்பாடு, பாரம்பரியம் என அனைத்து விடயங்களிலும் மேலோங்கி நிற்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தமிழ்த் தலைமைகள் பதவிக்காக அடிபட்டு மக்களை மேலும் மேலும் படுபாதாளத்தில் தள்ளாது அனைத்து துறைகளிலும் மக்களை முன்னேற்றுவதற்கு வழியேற்படுத்த வேண்டும்.