தமிழ் தமைமைகள் ஒருமித்த குரலில் செயற்பட வேண்டும்.


(பழுகாமம் நிருபர்)
தமிழ் தமைமைகள் ஒருமித்த குரலில் செயற்பட்டால் நமது உரிமையினை பெறுவதற்கு பலமாக இருக்கும் என பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மெலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் வரலாற்றில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் தமிழ் தலைமைகளை பேரினவாத தலைவர்கள் காலைவாரி விட்ட சந்தர்ப்பங்களே உள்ளன. ஆனால் தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் இருவருக்கிடையேயும் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தமிழ் மக்களின் உரிமையை பெறுவதற்கான சிறந்த வழி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் தலைமைகள் அனைவரும் ஒருமித்த குரலில் செயற்படுவோமானால் உரிமையினை பெறுவதற்கு பலமாக இருக்கும். இந்த நல்லாட்சியில் தமிழர்களுக்கென்று மீளப்பெற முடியாத நிரந்தர அரசியல் தீர்வை பெறவில்லை என்றால் இனி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை.

அரசியலில் சிறந்த அனுபவமும், சாணக்கியமும் கொண்ட தந்தை செல்வாவின் வழியில் சென்று கொண்டிக்கும் சம்பந்தன் ஐயா மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோருடன் இன்னும் சில தலைமைகள் தமிழ் தரப்பு பற்றிய விடயங்களில் மிகவும் உன்னிப்பாகவும், நுணுக்கமாகவும் ஒவ்வொரு அடியையும் நகர்த்தி கொண்டிருக்கின்றார்கள். இதனை குழப்பும் முயற்சியில் இன்னுமொரு தரப்பு முயல்வது தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பாக உள்ளது.

 தமிழ் தலைவர்கள் விடுகின்ற அறிக்கைகளானது அரசியல் சாசன தீர்வு திட்ட விடயத்தை குழப்பாமல் தமிழர்களுக்கென்று மீளப்பெற முடியாத நிரந்தர தீர்வினை பெறுவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இன்று சில பேரினவாத தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலயில் அந்த வலையில் தமிழராகிய நாங்கள் விழாமல் ஒருமித்த குரலில் செல்ல வேண்டும் எனவும்  தெரிவித்தார்.