போக்குவரத்து தண்டப்பணத்தை 25,000ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம்.

போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற ஆகக்குறைந்த தண்டப்பணத்தை 25,000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் தண்டப்பண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கடந்த வியாழக்கிழமை(10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.
கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாயாக அதிகரிக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அங்கிகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.
போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.
மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.
ரயில் வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.
அங்கிகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்
அத்துடன், போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்தல்.
அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.
குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% வரையான அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபாய்
குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% க்கும் அதிகமான மற்றும் 30% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபாய்
குறிக்கப்பட்ட வேகத்தை விட 30% க்கும் அதிகமான மற்றும் 50% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாய்
குறிக்கப்பட்ட வேகத்தை விட 50%க்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாய்,
எனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டப்பணம் அறவிடல்.
இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதல். (இக்குற்றத்துக்காக வேண்டி குறைந்த பட்ச உரிய இடத்துக்கான தண்டப்பணத்தினை 2,000 ரூபாய் வரை அதிகரித்தல்)
பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபாய் குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)
பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபாய் குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)
குறித்த வயதுக்கு குறைந்த வயது பொருந்திய ஒருவரினால் வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரித்தல்)
மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 2,500 ரூபாய் வரை அதிகரித்தல்.
கையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபாய் உரிய இட தண்டப்பணத்தை அறவிடல்.
சாரதி புள்ளியிடும் செயன்முறையினை துரிதப்படுத்தல்.
வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கெமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற உரிய இடத்துக்கான தண்டப்பணத்தை அறவிடுவதற்காக இலத்திரனியல் செலுத்துகை முறையினை பயன்படுத்துவது தொடர்பான யோசனையினை துரிதமாக செயற்படுத்தல்.
அதிவேக வீதிகளில் மற்றும் பெருந்தெருக்களில் பயணிக்க வேண்டிய உயரிய வேகம் தொடர்பில் தெளிவாக பிரசுரித்தல்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து போக்குவரத்துக்குரிய ஒன்றிணைந்த நேரஅட்டவணை அல்லது பொருத்தமான வேலைத்திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்தல்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் தொடர்பான நிர்ணயங்களை மேற்கொள்வதற்கு நிர்வனம் ஒன்றை ஸ்தாபித்தல்.
பயணிகள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் செயற்றிறன் மிக்க பொது போக்குவரத்து சேவையினை ஸ்தாபித்தல்.
போக்குவரத்து சட்டத்தினை செயற்படுத்துகின்ற சில அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கென மற்றும் சட்டத்தினை செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காக நவீன தொழில்நுட்ப முறையொன்றை பாவித்தல்.
ஆகியவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.