மண்முனை தென்கு பிரதேசத்தில் குப்பைகள் அகற்றப்படாததினால் பெரும் அவலம்

மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக குப்பைகள் அகற்றப்படவில்லை.இதனால் தொடர்ச்சியாக பிரதேசத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.


மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் பிரதேச சபையினர் தீர்க்க வேண்டும். தீர்க்காத பட்சத்தில் பிரதேசத்தில் உள்ள குப்பைகளை பிரதேச சபைக்குள் கொட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.

விடுதிக்கல் குப்பைமேட்டில் தீயேற்பட்ட போது, அவ்விடத்திற்கு சமூகம் கொடுத்திருந்தேன். அதன்போது ஆரையம்பதி பிரதேசசபை செயலாளரிடம் உரையாடிய போது, உக்கக்கூடிய கழிவுகளை தமக்கு வழங்குமாறு கூறியிருந்தார்.

புதிய இடமொன்று குப்பை கொட்டுவதற்கு என தீர்மானிக்கும் வரை அவற்றினை அங்கு வழங்குமாறு மண்முனை தென்மேற்கு பிரதேசசபை செயலாளரிடம் கூறியிருந்தேன்.

ஆனால் அந்த செயற்பாட்டினை பிரதேசசபை செயற்படுத்தவில்லை. அல்லது அதில் உள்ள சிக்கல்கள் குறித்தோ எமக்கு அறிவிக்கவுமில்லை.

அண்மையிலும் கூட மகிழடித்தீவு வைத்தியசாலையின் கழிவுகள் அகற்றப்படவில்லையென அங்குள்ள நோயாளர்கள் குறிப்பிட்டனர்.உடனடியாக அங்குள்ள குப்பைகளை அகற்றுமாறு பிரதேச சபை செயலாளருக்கு அறிவித்தேன்.

அத்துடன், செய்வதாக ஒப்புக்கொண்டும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் பிரதேசத்தில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. இவற்றினை பிரதேச சபை உடனடியாக தீர்க்க வேண்டும்.ஒரு வாரத்திற்குள் பிரதேச சபையினர் தங்களுக்கான இடத்தினைப் பெற்று குப்பைகளை அகற்றாதவிடத்து, பிரதேசத்தில் உள்ள கழிவுகள் அனைத்தையும் பிரதேச சபைக்குள் கொட்ட வேண்டிய நிலையேற்படும்.

மக்களுக்கு சேவை செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், தங்களால் சேவை செய்ய முடியாதெனின் அந்த இடத்திலிருந்து இடமாற்றம் பெற்று செல்லலாம் என்றார்.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பல இடங்கள் உள்ள போதிலும், குப்பை கொட்டுவதற்கு இடமில்லையெனக் கூறுவது பொருத்தமற்றது என மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

குப்பை கொட்டுவதற்கான இடத்தினை புதன்கிழமை, பிரதேச சபை செயலாளர், கிராமசேவை உத்தியோகஸ்தர்கள், பொதுச்சுகாதார சேவை அதிகாரி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு, தெரிவு செய்யும் இடத்தில் உடனடியாக குப்பைகள் கொட்டுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சேரிக்கப்படும், குப்பைகள் அனைத்தும் விடுதிக்கல் கிராமத்தில் கொட்டப்பட்டன.

இந்த குப்பை மேட்டில் தீயேற்பட்டதை தொடர்ந்து, அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனக்கூறி அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதேச கழிவுகள் அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.