கூழாவடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

 (லியோன்)

புதுமைபுரம் கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கூட்டுத்திருப்பலி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா (02) கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

23.06.2017  வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில்  01.07.2017  சனிக்கிழமை  மாலை  புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றது.

கூழாவடி மற்றும் மாமாங்கம் ஆகிய பகுதிகள் ஊடாக இந்த திருச்சொரூப பவனி நடைபெற்றதுடன் இந்த திருச்சொரூப பவனியின் போது வீதிகளில் பக்தர்கள் பந்தல் அமைத்து அலங்கரித்து திருச்சொரூபத்தினை பக்தி பூர்வமாக வரவேற்றனர்.

ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை பேதுரு ஜீவராஜ்   தலைமையில் இந்த திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றது.

இதன் இறுதி நிகழ்வான திருவிழா கூட்டுத்திருப்பலியும் கொடியிறக்கமும் (02) ஞாயிற்றுக்கிழமை  காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்ட  திருவிழா திருப்பலியில் பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ் , சிறிய குருமட அதிபர் அருட்தந்தை ஜெ.எஸ் மொறாயஸ் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .

ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு  விசேட திருப்பலியுடன் புதுநன்மை ,உறுதிப்பூசுதல்  ஆகிய  அருள் அடையாளங்கள்  பங்கு மாணவர்களுக்கு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழங்கப்பட்டது

இதனைத்தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் திருச்சொரூப ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

இந்த திருவிழா  திருப்பலியில்   பெருமளவான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது