வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக தாய்லாந்து நாட்டைப்போல் விபசாரத்தினை இந்நாட்டிலும் முன்னெடுப்பதற்கு இடமளிப்பீர்களா என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி நிலையத்திற்கு ஆதரவாக குரலெழுப்பும் புத்திஜீவிகளையும் கடுமையாக சாடினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடாபான விவாதத்தில் கலந்து கெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் நெருக்கடிகளை சந்தித்து வரும் ஒரு மாவட்டமாகும். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தின் காரணத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கு பின்னரான காலத்தில் இம்மாவட்டத்தினை வறுமை வாட்டிக்கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபானச்சாலைகள் பல தோற்றம் பெற்றன. தற்போது இம்மாவட்டத்தில் 66 மதுபான சாலைகள் காணப்படுவதோடு அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் 67மது பானசாலைகள் காணப்படுகின்றன.
இலங்கையிலேயே அதிகளவு மதுபானசாலைகளைக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பே காணப்படுகின்றது. மட்டக்களப்பின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஆயிரம் மில்லியன் ரூபாவே ஒதுக்கப்படுகின்றது. ஆனால் வருடமொன்றுக்கு மட்டும் மட்டக்களப்பில் மதுபானத்திற்காக 4800மில்லியன் ரூபாக்கள் செலவிடப்படுகின்றமைக்கான பதிவுகள் உள்ளன.
2016ஆம் ஆண்டு மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 41இலட்சத்து 91ஆயிரத்து 891லீற்றர் மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக பதிவுகள் உள்ளன. இதற்காக செலவிடப்பட்ட தொகை 281கோடியினையும் தாண்டியதாகவே காணப்படுகின்றது.
இத்தகைய நிலைமையில் தற்போது கல்குடாவில் உள்ள கும்புறுமுனையில் மதுபானத்தினை உற்பத்தி செய்வதற்கான நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு நாம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், பிரதேச சபையிலும் அதனை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானங்களை மேற்கொண்டு அறிவித்தல் விடுத்துள்ளோம். கிழக்கு மாகாண சபையும் எதிர்ப்பு தீர்மானத்தினை அறிவித்துள்ளது.
எனினும் அந்த நிர்மாணப்பணி தற்போது வரையில் நிறுத்தப்பட்டதாக இல்லை. இவ்வாறான நிலையில் அந்த நிறுவனம் அப்பகுதிக்கு தொழில் வாய்ப்பினையும், நெல்விற்பனை மூலம் வருமானத்தினையும் பெற்றுத்தரும் என்று புத்திஜீவிகள் என கூறும் சில வைத்தியர்கள் உள்ளடங்கிய உறுப்பினர்கள் பிரசானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையிலேயே மட்டக்களப்பில் ஏற்கனவே மதுபான நிலையங்கள் அதிகரித்து அம்மாவட்டத்தினை தொடர்ந்தும் வறுமை, வாழ்வாதா நெருக்கடி என்பன வாட்டி வதைக்கின்ற பின்னிலையிலேயே இவ்வாறானதொரு நிறுவனம் அவசியமா என்பதை ஒருநொடி சிந்தித்து பார்க்க வேண்டும்.
சமுகத்தின் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்கும் வைத்தியர்கள் புத்திஜீவிகள் இது தொடர்பாக சரியான நிலைப்பாட்டினை எடுத்து மக்களுக்கு விளிப்பூட்டும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்கள். முஸ்லிம் சகோதர்களும் இந்த விடத்தில் சரியான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் நாம் போதையற்ற நாட்டினை கட்டியெழுப்புவதனை இலக்காக கொண்டு செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் இந்த நிர்மாணத்தினை உடன் தடுத்து நிறுத்துமாறு அம்மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக மகஜரொன்றை அளித்துள்ளோம்.
அதனை அடுத்து அவர் குறித்த விடயம் தொடர்பிலான விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளார். அந்த குழு நியாயமான அறிக்கையை வெளியிடும். ஆதன் பிரகாரம் ஜனாதிபதி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றோம்.
அத்துடன் மட்டக்களப்பில் அதிகரித்துக் காணப்படும் மதுபானச் சாலைகளை குறைப்பதற்கு அல்லது அவற்றை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றேன் என்றார்.