சுவாமி விபுலானந்தர் தொடர்பில் தெரியாத பல விடயங்கள் -மனந்திறக்கிறார் சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ்

சுவாமி விபுலானந்தரின் ஆளுமை தொடர்பிலான பல விடயங்கள் வெளிவராமல் இருப்பதாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்தஜி மகராஜ் தெரிவித்தார்.

என்னிலடங்காத ஆற்றல்களைக்கொண்டவராக சுவாமி விபுலானந்தர் விளங்கியதாக ஆய்வுகள் மூலம் புலப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வீரத்தமிழனாக அன்று சுவாமி விபுலானந்தர் விளங்கியதாகவும் பிரித்தானியர் பல்வேறு அச்சுறுத்தல்களை வழங்கியபோதும் அதனை திடமான மனதுடன் அவர் எதிர்கொண்டதாகவும் சுவாமி பிரபுபிரபானந்தஜி மகராஜ் தெரிவித்தார்.

இலங்கையின் முதல் பேராசிரியர் என்ற அந்தஸ்த்தைக்கொண்டுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு நிறைவு விழா இன்று மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாசபையின் ஏற்பாட்டில் இன்று காலை இரண்டு மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்கள் நடைபெற்றன.

பட்டிருப்பு சந்தியில் இருந்தும் சித்தாண்டி முருகன் ஆலய சந்தியில் இருந்தும் விபுலானந்தரின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்திகள் சகிதம் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தினை வரவேற்கும் வகையில் கிராமங்கள் தோறும் நிறைகுடங்கள் வைத்து விபுலானந்திரன் திருவுருவப்படத்திற்கு மக்கள் வணக்கம் செலுத்தினர்.

இளம் பராயத்தினர் மத்தியிலும் எதிர்கால சமூகத்தின் மத்தியிலும் இந்த நாட்டிறிக்காகவும் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூதாய எழுச்சிக்காகவும் விபுலானந்தர் ஆற்றிய பணியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்கள் நடைபெற்றன.

இந்த விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்கள் கல்லடி,உப்போடையில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியை வந்தடைந்ததும் அங்கு சமாதியில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாசபையின் தலைவரும் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்தஜி மகராஜ் கலந்துகொண்டு வழிபாடுகளை நடாத்திவைத்தார்.

இதன்போது சுவாமி விபுலாந்தர் தொடர்பில் முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மாணவர்கள், மட்டக்களப்பு மாவட்ட சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாசபை உறுப்பினர்கள்,பாடசாலை ஆசிரியாகள்,அதிபர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.