ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

கல்குடாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

 கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் இன்று (29) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்னும் முடியவில்லையென கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, மார்ச் மாதம் 21ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளர்களான நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இடத்திலிருந்த சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்கியுள்ளதுடன், சுமார் 6 கிலோமீற்றர் வரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.