எதிர்க்கட்சி தலைவர் தீர்க்கமான முடிவினை தருவார் என்று நம்புகின்றோம் -வேலையற்ற பட்டதாரிகள் நம்பிக்கை

எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு தீர்க்கமான முடிவினை அறிவிப்பார் என தாங்கள் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 71வது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்றுவருகின்றது.

தமது தொழில் உரிமையினை வழங்குமாறு தெரிவித்து இரவு பகலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இதன்போது அதிளவான பெண்கள் பங்குபற்றியுள்ளதுடன் அதிகளவான பெண்கள் பங்குபற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரும் நேற்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தமது போராட்டத்திற்கான உறுதியான பதில்கள் எதிர்க்கட்சி தலைவர் மேற்கொள்ளும் சந்திப்பினை தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்படும் என நம்புவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது நியாயமான போராட்டத்தினை உணர்ந்து தங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வருகைதந்து தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டு அதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.

தமக்கான உறுதிமொழிகள் வாய்மொழி ரீதியாக இல்லாமல் செயற்பாட்டு ரீதியாக நடைபெறும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.