சாதாரண தரத்தில் ஏழு ஏ க்களை பெற்ற மாணவன் கடலில் மூழ்கி பலி –ஆரையம்பதியில் சோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கர்பலா கடலில் நேற்று(16.4.2017) ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் காத்தான்குடி கடற்கரையோரம் இன்று (17.4.2017) திங்கட்கிழமை கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

தனது குடும்பத்தவருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை கடற்கரைக்கு சென்ற இம் மாணவன் கடலில் நீராடியுள்ளார். இதன் போது இவர் கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார் இவரை கடற்படையினர் தேடி வந்த நிலையில் இவரின் சடலம் காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடற்கரையோரம் கரையொதுங்கியுள்ளது. இதனை கண்ட பொது மக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தை குறித்த மாணவனின் பெற்றேர் அடையாளம் கண்டனர்.ஆரையம்பதி பழைய கல்முனை வீதி வைரவர் கோயில் லேனைச் சேர்ந்த வீரசிங்கம் தர்மதன்(17) எனும் மாணவனின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.

குறித்த மாணவன் கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை எழுதி அதில் 7ஏ மற்றும் 2பி பெறுபேற்றை பெற்றிருந்தார் எனவும் தெரிய வருகின்றது.

இது குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.