தாக்குதல் நடாத்த முயற்சிக்கின்றனர் –பட்டதாரிகள் கவலை

சத்தியாக்கிரக போராட்டம் நடாத்திவரும் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்தனர்.

நேற்று இரவு இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் திட்டிவிட்டு தாக்குவோம் என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 56வது நாளாகவும் இன்று திங்கட்கிழமையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமக்கான தொழில் உரிமையினை வழங்குமாறு மத்திய மாகாண அரசாங்கங்களை கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.;

தமது போராட்டத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்கமுடியாத சில அரசியல்வாதிகள் தங்ளது அடிவருடிகள் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இந்தவேளையில் குறித்த பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்சகோதரிகள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.