ஆரையம்பதியில் ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராத்தில்  குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டையில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இந்தப்பிரசேத்தில் வயோதிப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த மரண வீட்டில் மரணித்தவருக்கு சொந்தமான காணிப் பங்கீடு தொடர்பில் குடும்பத்தினருக்குள் ஞாயிற்றுக்கிழமை (19.3.2017) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தர்க்கம் கைகலாப்பாக மாறியுள்ளது. இதன் போது கத்திகுத்தும் மற்றும் தடியினால் தாக்குதல் என்பன இடம் பெற்றுள்ளன. இந்த சண்டையில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஆரையம்பதி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தில் ஜெகதீஸ்வரன்(வயது 37) ஜெய்சங்கர்( வயது 35) சின்னத்தம்பி( வயது 40) விஜேய ரஞ்சித்(36) விஜேய சங்கர்(வயது 27) சிரீகாந்த( வயது 24) மற்றும் எஸ்.தங்கேஸ்வரி(வயது 55) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.