நல்லதொரு மனிதனால் நல்ல மாற்றத்தை குடும்பத்திலும் சமூகத்திலும் நாட்டிலும் கொண்டு வர முடியும்.

(லியோன்) 

நல்லதொரு மனிதனால் தான் நல்ல மாற்றத்தை குடும்பத்திலும் சமூகத்திலும் நாட்டிலும் கொண்டு வர முடியும். என மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ் . ரங்கநாதன் தெரிவித்தார் 



முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தரநியமங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண  அரச அலுவலர்களைப் பயிற்றுவிக்கும் இரண்டு நாள் செயலமர்வு  மட்டக்களப்பு தன்னாமுனை நடைபெறுகின்றது .


பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தரநியமங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை பணியக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு  மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர்  பயிற்சி மண்டபத்தில் நடைபெறுகின்றது .

இந்த பயிற்சி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 09.00 மணியளவில் ஆரம்பமானது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ் . ரங்கநாதன் கலந்துகொண்டார் .

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்  நாட்டில் நல்ல பிரஜைகளாக சிறுவர்களை உருவாக்குவதே  நம் அனைவருடைய  கடமையாகும் .

பெற்றோர்கள் தமது  பிள்ளைகளை வைத்தியராக,  பொறியியலாளராக, கணக்காளராக,  சட்டத்தரணியாக உருவாக்க வேண்டும்  என்ற நிலையில் செயல்பட்டு வருகின்றனர் .

ஆனால்  இவையெல்லாவற்றையும் விட பிள்ளைகளை சிறந்த நல்லொழுக்கமுள்ள  பிரஜைகளாக  உருவாக்குவதே இன்றுள்ள சமகாலத் தேவையாகும்.

பதவி  அந்தஸ்து அடிப்படையில் மனிதர்களை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் சேவையை விட ஒரு மனிதாபிமானமுள்ள சிறந்த பிரஜையாக உருவாக்குவதால் கிடைக்கும்  சேவையை அளவிட முடியாது.

நல்ல மனிதனல்லாத ஒரு வைத்தியரோ அல்லது பொறியியலாளரோ அல்லது அதைவிட பெரிய பதவி வகிக்கின்ற ஒருவரால் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் கிட்டப்போவதில்லை.

நல்லதொரு மனிதனால் தான் நல்ல மாற்றத்தை குடும்பத்திலும் சமூகத்திலும் நாட்டிலும் கொண்டு வர முடியும்.

அதனாலே தான் மற்ற  அபிவிருத்திகளையும் விட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தியில் நாம் கூடுதல் கரிசனை காட்ட வேண்டியுள்ளது.

அரசாங்க அலுவலர்களாக ஊதியம் பெறுகின்ற நீங்கள் சிறந்த ஒரு சிறந்த விழுமியங்களைக் கொண்ட சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு உங்களது கடமை நேரத்தை செலவிட வேண்டும்.

அதனை நீங்கள் செவ்வனே செய்தால் எதிர்கால சமூகத்தில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என தனது உரையில் தெரிவித்தார் .

இந்த முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தரநியமங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண  அரச அலுவலர்களைப் பயிற்றுவிக்கும் இரண்டு நாள் செயலமர்வில் வளவாளர்களாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் செயலகத்தின்  பிரதி பணிப்பாளர் அருண அதுகோரல ,கொழும்பு திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி  தேவராசா முகுந்தன் மற்றும் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை  ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும்  தமிழ் ,முஸ்லிம் மற்றும்  சிங்கள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பாலர் பாடசாலை பணியகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்