மட்டக்களப்பில் கறுப்புபட்டியணிந்து கிராம சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பிக்குவினால் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் மிரட்டப்பட்டுள்ளதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இன்று முற்பகல் கறுப்பு பட்டியணிந்து பிரதேச செயலகங்களுக்கு முன்பாக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த எதிர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று காலை எதிர்ப்பு போராட்டங்களில் கறுத்த பட்டியணிந்து ஈடுபட்டனர்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் கிராம சேவையார் ஒருவரை பௌத்த மதகுரு கடுமையான வார்த்தை பிரயோகங்கள் கொண்டு ஏசியதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.

குறித்த பிக்குவுக்கு எதிராக கடுதையான நடவடிக்கையெடுக்கப்பட்டு தமது கடமைகளை சுதந்திரமாக செய்யும் வகையில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு கிராம சேவையாளர்கள் தெரிவித்தனர்.