மட்டக்களப்பில் காணிகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ள - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்

காணி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கான சட்ட நடவடிக்கை தொடர்பில் விழிப்பூட்டும்செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூகின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலப்பகுதியில் அழுத்தங்களினால் குறைந்த விலையில் காணிகளை விற்பனைசெய்துவிட்டு இடம்பெயர்ந்த மற்றும் யுத்தம் காரணமாக வலுக்கட்டாயமாக காணிகள் இழக்க செய்யப்பட்டவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா,கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பிரான சம்சுதீன் ஆரிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சட்டத்தரணிகள் பலரும் கலந்துகொண்டதுடன் தமது காணிகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடைமுறைகள் தொடர்பில் தெளிவூட்டல் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த நிலையிலும் யுத்தம் ஏற்பட்டதன் காரணமாக தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேறிய நிலையிலும் சில பகுதிகளில் புலிகளின் அச்சுறுத்தலினால் இனாமாக வழங்குவது போன்று சிறிய தொகைகளுக்கு அவற்றினை விற்றுவிட்டும் பலாத்காரமாக கையகப்படுத்தியும் முஸ்லிம்களின் காணிகள் இழக்கப்பட்டன.

இழந்த காணிகளை மீட்கமுடியாத நிலையில் இழந்தவை இழந்தவைதான் இருக்கின்ற காலத்தில் இருப்பதை வைத்து வாழவேண்டிய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஹ{ப் ஹக்கீமினால் 2012ஆம் ஆண்டு இழந்த காணிகளை மீட்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அன்றைய அரசியல் சூழ்நிலையால் அது முடியாமல்போனது.

ஆனல் இன்றைய நல்லாட்சி காலப்பகுதியில் சட்ட சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் அந்ததந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம்.இதனை நாங்கள் சிறந்தமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் காணிப்பிரச்சினையென்பது முஸ்லிம்களுக்கும் மட்டும் வரையறுக்கப்பட்ட பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது.

இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு குடியிருப்பதற்கான காணிகள்,ஆயுதப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள்,பயங்கரவாததத்தினால் விடுபட்ட காணிகள் எல்லாம் பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் தமிழ் சமூகத்திற்கு கிடைத்துள்ளது.அதேபோன்று இங்கு வாழ்ந்ததாக கூறப்படும் சிங்கள மக்களுக்கும் சிறந்த வழிகாட்டல்கள் ,நிர்வாக ரீதியான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி ரீதியாக முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் கூட சில பிரதேச செயலாளர்களின் பேமிட் என்ற போர்வையில் எல்லைகளை மாத்திரம் குறிப்பிட்டு எந்த விபரங்களும் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைமை இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நடந்துள்ளது.காணி உறுதிப்பத்திரங்களுடன் பிரதேச செயலகங்களுக்கும் காணி திணைக்களங்களுக்கும் அலையும் நிலை இந்த மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

2633 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினைக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.இவற்றில் 229 சதுரக்கிலோமீற்றர் நீர்தாங்கிய பகுதி காணப்படுகின்றது.இந்த மொத்த நிலப்பரப்பிற்குள் 1.35வீதமான நிலப்பரப்புக்குள் முஸ்லிம்கள் நெருக்கி நசுங்கி வாழவேண்டிய கட்டாய நிலையேற்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27வீதமான முஸ்லிம்கள் வாழும் நிலையில் 1.35வீதமான நிலப்பரப்புக்குள் வாழவேண்டிய கவலை தரும் நிலையே இருக்கின்றது.இந்த நிலையிலேயே இந்த சட்டம் எமக்கு வரப்பிரசாதமாகவுள்ளது.