உறுகாமம்குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போன குடும்பஸ்தரின் சடலம் உறுகாமம் குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

உறுகாமம் பாரதி கிராமத்தினை சேர்ந்த பழனிவேல் மனோகரன்(39வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்;டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் உறுகாமம்குளத்திற்கு மீன்பிடிக்கச்சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை உறுகாமம் குளம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்திற்கு சென்ற கரடியனாறு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி முகமட் நஸீர் ஆகியோர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.