வேறு மாவட்டங்களுக்கு நியமனம்பெற்ற ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திற்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு

கல்வியல் கல்லூரிகளை பூர்த்திசெய்த நிலையில் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மாகாண பாடசாலைகளுக்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டாhர்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன்
கருணாகரம்,  இரா.துரைரெட்னம், மா.நடராஜா, சிப்லிபாரூக், ஞா.கிருஸ்ணபிள்ளை,புஸ்பராஜா ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வெளி மாவட்டங்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட 310பேருக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளிலும் நியமனம் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பயனாக வேறு மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்துச்செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்குள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் 248 நியமனங்கள் பெண்களாகவும் 62பேர் ஆண்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் உரையாற்றினர்.