இனத்தின் துரோகியாக தன்னை இனம் காட்ட பலர் முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்

(லியோன்)


முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் , சிங்கள மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் ஊக்குவிக்கின்ற ஒருவராகவும் , இனத்தின் துரோகியாகவும் என்னை இனம் காட்ட பலர் முயற்சிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .திருமதி .பி .எஸ் .எம் சார்ள்ஸ் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட செயலக அரசாங்க அதிபர்  அலுவலகத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்   போது இவ்வாறு தெரிவித்தார் .

தொடர்ந்து ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் .திருமதி .பி .எஸ் .எம் சார்ள்ஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தரப்புக்களிலும், பத்திரிகைகளிலும் , புத்தி ஜீவிகளால் கூட்டப்படுகின்ற கூட்டங்களிலும் என் மீது சுமத்தப்படுகின்ற பாரிய குற்றசாட்டுக்கள் சம்பந்தமாக நான் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தலை வழங்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு   உள்ளாகி உள்ளேன் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் , சிங்கள மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் ஊக்குவிக்கின்ற ஒருவராகவும் , இனத்தின் துரோகியாகவும் என்னை இனம் காட்ட பலர் முயற்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள் .

அரசாங்க அதிபராக இந்த மாவட்டத்திலே இன மத மொழிகளுக்கு அப்பால் சேவையாற்றும் படிதான் அரசின் கொள்கைகளும், தீர்மானங்களும் ,சுற்றுநிருபங்களும் எங்களுக்கு சுற்றிகாட்டுகின்றன .

உதாரணமாக இரண்டு விடயங்களை இங்கு நான்  முக்கிய விடயமாக எடுத்துக்கொள்ள விரும்புகின்றேன் .

முதலாவது வாகரை பிரதேசத்திலே மருதங்கேணி குளம் என்கின்ற பகுதிகளிலே அண்மையிலே மீள்குடியேற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற 22 குடும்பங்களுடைய  விடயம் சம்பந்தமாக  2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக அந்த பிரதேசத்தில் இருந்த மக்களது விபரங்கள் நேரடியாக அவர்களினால் நிரப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி மீள்குடியேற்ற அமைச்சு எங்களுக்கு தெரிவித்திருந்தது .

இதன்  அடிப்படையிலேயே தொடர்ந்து  கிழக்குமாகான ஆளுனராலும் ,ஏனைய பாராளுமன்ற ,மாகாணசபை , முதலமைச்சர் உட்பட அனைவரினாலும் பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடங்கலாக அனைத்தையும் நாங்கள் பிரதேச செயலாளரது நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது .

பிரதேச செயலாளரின் தலைமையிலே நியமிக்கப்பட்ட ஒரு குழு இந்த மக்களுடைய விபரங்களை உறுதி படுத்தியதன் பின்னர் அவர்கள் யுத்தம் நடந்த காலத்திற்கு முன்னர் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே அவர்களுக்கான மீள்குடியேற்றத்துக்கான சிபார்சினை வழங்கியதன் அடிப்படையில் தற்போது அவர்களுக்கான மாற்றுக்காணிகள் அவர்கள் ஏற்கனவே இருந்த காணிகள் வேறு மக்களுக்கு பிரதேச செயலாளரால் பகிர்ந்தளிக்க பட்ட காரணத்தினால் மாற்றுக்கானிகள் தற்போது வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது .

இதில்  உண்மையான  ஒரு விடயத்தை இன்று சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது .

முன்னாள் அமைச்சர் தேவநாயகம் இங்கு அமைச்சராக இருந்த காலத்தில் 1977ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த பகுதியிலே நூறு முஸ்லிம் குடும்பங்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டு அவர்கள் அங்கு வசித்திருக்கின்றார்கள் .

அதற்கான ஆவணங்களும் பிரதேச செயலகத்திலே முன்னர் அங்கு பிரதேச செயலாளர்களாக கடமை ஆற்றிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன .

இதேபோல்  இந்த மாவட்டத்தின் சில பகுதிகளில் யுத்தகாலத்திற்கு முன்னர் வெளியேறிய சிங்கள மக்களும் தங்களுடைய இருப்புக்களை  பிரதேச செயலாளர்களிடம் உறுதி படுத்திய பின்னர் அவர்களுக்கு மீள்குடியேற்றம் செய்யும் படியாக மீள்குடியேற்ற அமைச்சு வழங்கிய அறிவுறுத்தல் பிரகாரம் தான் நாங்கள் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செய்கின்றோமே அல்லாமல் அரசாங்க அதிபராகிய நான் தன்னிச்சையாக எந்தவொரு இனத்திற்கும், ,மதத்திற்கும் , மொழிக்கும் முன்னுரிமை  கொடுத்தோ ,சட்டத்திற்கு முரணாகவோ , நிர்வாக  செயல்பாடுகளுக்கு மாறாகவோ எந்த மீள்குடியேற்ற நடவடிக்கையும் நான் மேற்கொள்ளவில்லை .

இதேபோல் 2011ஆம் ஆண்டு கிரான் பிரதேச செயலகத்திலே அந்த பிரதேச செயலாளர்  360 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கி உள்ளார் .

இவைகள் எல்லாம் செய்யப்படுகின்ற அதிகாரிகள் யாராகவோ இருக்க இதில் எதிலும்  ஈடுபடாமல் இருக்கின்ற என்னை ஒரு துரோகியாக காட்ட ஊடகங்களும் , புத்தி ஜீவிகளும் , சில அதிகாரிகளும் , சமுகத்தை சேர்ந்தவர்களும் முற்படுகின்றனர்.

இந்த  விடயத்தை தங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருந்தால் உண்மையாக அவர்கள் அவற்றை அறிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் அவற்றை நேரடியாக என்னுடனோ அல்லது இந்த விடையத்த கையாளுகின்ற மாவட்ட செயலகத்தின் எந்த அதிகாரியுடனோ நேரடியாக தொடர்பு கொண்டு அவை பற்றிய விளக்கங்களை பெற்றுக்கொள்வது தான் நாகரிகமான செயல்பாடு என நாங்கள் நினைகின்றோம் .

அதை விடுத்து  இரகசியமாக கூட்டங்களை கூடி அந்த கூட்டங்களிலே கேவலமான விதத்திலே விமர்சிக்கின்ற அனாகரியமான நடைமுறைகளை கைவிடுவார்கள் என்று நான் எதிர்பார்கின்றேன்  என தெரிவித்துக்கொண்டார் .