வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம் -இளைஞன் தலைமறைவு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் இளைஞர் ஒருவரை தேடிவருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மருதமுனை பகுதியை சேர்ந்தவர் எனவும் இவரை ஒருவர் அழைத்துவந்து கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்திருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரனால் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் நேற்று களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் குறித்த யுவதியை அனுமதித்துவிட்டு தான் பயணித்த காரை வைத்தியசாலை வளாகத்தில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த இளைஞனை தேடிவருவதாகவும் குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவான இளைஞர் கண்டியை சேர்ந்தவர் என தகவல்களை வைத்தியசாலையில் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.