பட்டிருப்பில் நன்னடத்தை அலுவலகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டிருப்பில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நன்னடத்தை அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஒன்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் 13வது அலுவலகமாக இந்த நன்னடத்தை அலுவலகம் பட்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.சதீஷ்னர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சர் ஏ.நஷீர் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி சரண்யா சுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் சிறுவர்கள் மற்றும் நன்னடத்தை தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.