உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியனானது டச்பார் இக்னேசியஸ் அணி

மட்டக்களப்பு நாவற்குடா ஜீவஒளி விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு கல்லடி டச்பார் இக்னேசியஸ் அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜீவஒளி விளையாட்டுக்கழகத்தின் 43வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாவற்குடா ஜீவஒளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடக்கம் இன்று வரை இந்த உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றுவந்தன.

இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 38 கழகங்கள் பங்குகொண்டதுடன் இறுதிப்போட்டிக்கு கல்லடி டச்பார் இக்னேசியஸ் அணியும் மட்டக்களப்பு மைக்கல்மென் அணியும் தெரிவுசெய்யப்பட்டது.

அணிக்கு ஏழு பேர் கொண்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று மாலை ஜீவஒளி விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் எஸ்.டினேஸ் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கலந்துகொண்டார்.

இதன்போது இறுதிப்போட்டி அதிதிகள் அணி வீரர்கள் அறிமுகம்செய்யப்பட்டு இறுதிப்போட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கு கல்லடி டச்பார் இக்னேசியஸ் அணி வுPரர்கள் சிறப்பான முறையில் விளையாடி இரண்டு கோல்களைப்பெற்றுக்கொண்டனர்.இதனடிப்படையில் 2-0 என்ற கணக்கில் கு கல்லடி டச்பார் இக்னேசியஸ் அணி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது சிறந்த கோல் காப்பாளராக கல்லடி டச்பார் இக்னேசியஸ் அணியை சேர்ந்த மேசாக் டிலிமா தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த வீரராக அதேஅணியை சேர்ந்த டி.டரோலிஸ் பாத்லட் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசுகளும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த சுற்றுபோட்டியில் மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு ரட்னம் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்,மற்றும் இரா.துரைரெட்னம் ஆகியோர் உரையாற்றினர்.