ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 61வது பாதயாத்திரை

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய 61வது பாதயாத்திரை இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பமானது

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பாதை யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் ஆலய திருவிழாவை முன்னிட்டு  நடைபெறும் இந்த புனித பாதயாத்திரை  மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் விசேட  செபவழிபாடுகளுடன்  காலை 06.00 மணிக்கு பாதயாத்திரை அன்னையின் திருவுருவ பவனியுடன்  ஆரம்பமாகி வீச்சுக்கல்முனை அன்னம்மாள்  ஆலயம், வலையிறவுப் பாலம் ஊடாக அன்னையின் திருத்தலத்தை  சென்றடைந்தது .

கடந்த 26ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை ஆலய திருவிழா நாளை  4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை விசேட திருப்பலியுடன் நிறைவு பெறவுள்ள நிலையிலேயே இப் பாதயாத்திரை இன்று நடைபெற்றது

இந்த புனித யாத்திரையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா மற்றும் மட்டக்களப்பு  மறை மாவட்டத்தின் அனைத்து பங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்  கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது