ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் தேரோட்டம்

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு திருச்செந்தூர் ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
இந்தியாவின் திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக கடல் அலையின் ஆனந்தத்தில் விற்றிருக்கும் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை(23)ஆரம்பமானது.

எட்டு தினங்கள் நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்று பிற்பகல் ஆலயத்தில் தம்ப பூஜை நடைபெற்று முருகப்பெருமான் உள்வீதியுலா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து தேரடிக்கு பக்தர்கள் புடை சூழ முருகப்பெருமான்கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
பூஜையினை தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடக்கையிறை இழுத்துவர தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர்த்திருவிழால் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

நாளை வியாழக்கிழமை ஆலயத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.