படுவான்கரை பகுதியில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாய மரணச்சான்றிதழ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.
நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதிகளவில் கருத்துகளை முன்வைத்தனர்.

காணமல்போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறைப்பாடுகளை பதிவுசெய்யும்போது காணாமல்போனவர்கள் என்ற சொல்லுக்கு பதிலாக உயிரிழந்துவிட்டனர் முறைப்பாடுகள் பதிவுசெய்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் சிங்கள மொழிகளில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதனால் தங்களால் அதனை வாசித்து அறியமுடியவில்லையெனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பிள்ளைகளை கடத்திச்சென்றவர்கள் தொடர்பான விபரங்களை தாங்கள் வழங்கியுள்ளபோதிலும் இதுவரையிலும் எவர் மீதும் நடவடிக்iகெயடுக்கப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் அவர்கள் குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் தேர்தல் முறைகளிலும் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடத்தல் மற்றும் காணமல்போனவர்கள் சம்பத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் இன்றும் தங்களிடம் வாக்கு கேட்டுவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

காணமல்போனவர்களினை கண்டறியும் அலுவலகம் திறக்கப்பட்டதனையும் வரவேற்றுள்ள அவர்கள் அதன் அலுவலகத்தினை மட்டக்களப்பிலும் அமைக்கவேண்டும் என்பதுடன் அதில் பணியாற்றுவதற்கு தமது உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் எனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இங்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியின் தலைவர் கே.காண்டிபன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தறியும் செயலணியில் 250க்கும் மேற்பட்டோர் தமது கருத்துகளை முன்வைத்தனர்.