மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வளங்களைப்பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குத் தேவையான வளங்களை பெற்றுத்தருமாறு கோரி அவ்வைத்தியசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சில உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு பிரஜைகள் சபையின்; தலைவர் வி.கமலதாஸ் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக போதியளவு வைத்திய உபகரணங்கள் இல்லையென்பதுடன், வைத்திய நிபுணர்கள் வேலை செய்யக்கூடிய வசதிகளும் போதியளவில் இல்லை.

அத்துடன், இவ்வைத்தியசாலையில் தளபாடம் மற்றும் கட்டட வசதிகளும் போதியளவில் இல்லை.

மேலும், இவ்வைத்தியசாலையில் பெண்கள் நலன் தொடர்பான நிலையம் இல்லை. துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்களை சாதாரண நோயாளிகளுடன் வைத்தே சிகிச்சை அளிக்கவேண்டிய நிலைமை இவ்வைத்தியசாலையில் காணப்படுகின்றது' என்றார்.

'ஆகவே, இவ்வைத்தியசாலைக்குத் தேவையாக வளங்களை பெற்றுத்தந்து சிறந்த வைத்திய சேவையை முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' எனவும் அவர் கூறினார்.