மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றான மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனி இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பறவைக்காவடி,பாற்காவடி மற்றும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்வுடன் பெருந்திரளான பக்த அடியார்கள் பாற்குடங்களை ஏந்திவர இந்த பாற்குட பவனி சிறப்பாக நடைபெற்றது.

வீரமாகாளிம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.எட்டு தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெறும்.

அதனை முன்னிட்டு இன்று காலை கிழக்கின் தனித்து இசைக்கலையான பறை மேளம் முழங்க இந்த பாற்குட பவனி நடைபெற்றது.

மட்டக்களப்பு –திருமலை ஊடாக பவனி வந்த இந்த பாற்குட பவனியானது செல்வநாயகம் வீதி,ஊறணி பிரதான வீதியூடாக ஆலயத்தினை சென்றடைந்ததுடன் அங்கு அடியார்களினால் பாலாபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெற்றதுடன் நற்சிந்தனை நிகழ்வும் நடைபெற்றது.