பொத்தானைக்கு போக்குவரத்துக்கு பஸ் சேவை ஆரம்பம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் பொத்தானை கிராம மக்களின் நீண்ட கால வேண்டுகோளை ஏற்று அப்பிரதேசத்திற்குப் போக்குவரத்துச் சேவை திங்கட்கிழமை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக பஸ் சேவையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை 13.06.2016 பொத்தானை கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்படி வாழைச்சேனை நகரத்திலிருந்தும் பொத்தானை கிராமத்திலிருந்தும் தினமும் இரு சேவைகள் இடம்பெறும்.

காலை 6 மணிக்கும் காலை 10 மணிக்கும் வாழைச்சேனை நகரிலிருந்து புறப்படும் பஸ் காவத்தமுனை, வாகநேரி, முள்ளிவட்டவான் வழியாக பொத்தானை கிராமத்தைச் சென்றடையும்.அதேபோன்று பொத்தனை கிராமத்திலிருந்து காலை 7.00 மணிக்கும்; பிற்பகல் 2.45 மணிக்கும் புறப்படும் பஸ் இதே மார்க்கத்தில் வாழைச்சேனை நகரைச் சென்றடையும்.

பொத்தானை கிராமத்து மக்கள் அருகிலுள்ள வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி நகரப் பிரதேசங்களுக்கு தமது அன்றாட அலுவல்களை முடித்துக் கொள்வதற்கும் மாணவர்கள் நோயாளிகள் பயணம் செய்வதற்கும் மணிக்கணக்காக சுமார் 30 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகவே செல்ல வேண்டியிருந்தது.

இந்த மக்களின் போக்குவரத்துக் கஸ்டத்தை கருத்திற்கொண்டு முதலமைச்சர் உடனடியாக அவர்களது கிராமத்திற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்திருந்தார். அதற்கமைய இந்த பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ். ஹிதாயத்துல்லாஹ், இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர், வாழைச்சேனை இ.போ.ச சாலை முகாமையாளர் எம்.ஐ. அப்துல் அஸீஸ், வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணத் தலைவர் எம்.எச். மீராமுஹைதீன் உட்பட இன்னும் பல அதிகாரிகளம் தமிழ் முஸ்லிம் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.