நாளை தலைவர்களுக்கு இன்றைய ஜனாதிபதி நல்ல உதாரணம் -கிழக்கு முதலமைச்சர்

தலைவர்களான இன்றைய மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லதொரு உதாரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
திருகோணமலை உப்புவெளியில் நடைபெறும் சாரணர் ஜம்போரி பயிற்சி முகாமை இன்று (9.6.2016) வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய,

கிழக்கு மாகாண முதலமைச்சர்
இன்றைய இளைஞர்களாகிய நீங்களே நாளைய தலைவர்கள் மாணவர்களுக்கு மத்தியில் முன்மாதிரியாகத் திகழும் சாரணர்களாகிய நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.

சாரணர்களின் நடைமுறை இன்று நாட்டில் பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. சிறந்த தலைமைத்துவம், விட்டுக்கொடுக்கும் தன்மை, சக மாணவர்களுடன் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ளும் சிறப்பு, அனைத்து விடையங்களிலும் முன்மாதிரியாகவும், முன்னிலையிலும், தைரியமாகவும் நடந்து கொள்ளும் முறைகளை எடுத்துப் பார்க்கும்போது இன்றைய சாரண மாணவர்களான நீங்கள் நாளைய பெருந்தலைவர்களேயாகும்.

எனவே கடந்த கால நாட்டின் யுத்த வடுக்கள் இங்கு வந்திருக்கும் சாரண மாணவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தாய், தந்தையர் ஏதோ ஒரு முறையில் மிகவும் கஷ்டப்பட்டவர்களாக இருப்பார்கள்.

எனவே அவைகள் இன்று சுவடுகளாக உங்களுக்குப் எடுத்துச் சொல்வார்கள். ஆனால் நம்நாடு இனியும் அப்படியொரு நிலையில் சிக்காது ஒரே நாடு, ஒற்றுமையான மக்களாக வாழ வேண்டும் இதற்காக தங்களைத் தயார் படுத்தி வழி காட்டவேண்டியவர்களாக இன்று நீங்கள் இருக்கிறீர்கள்.

அதனால் உங்களிடம் நான் நம் நாட்டின் இன்றைய ஜனாதிபதியின் நடைமுறை அவரின் சிறந்த குணங்களையும், பரந்த மனப்பாங்கையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். இன்றைய ஜனாதிபதியின் நடைமுறை நாளைய தலைவர்களான உங்களுக்கு பெரும் எடுத்துக் காட்டாகவிருக்கிறது. என்று கூறுவதில் நான் சந்தோசமடைகிறேன்.

இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு வழங்கப்படும் பெரும் சலுகைகளில் ஜனாதிபதி மாளிகை முதன்மையானது. ஆனால் அதனை இன்னும் தனது பாவனைக்கு எடுக்காது அதனை தான் பாவித்தால் பெரும் செலவுகள் ஏற்படும் அந்த செலவுகளை தான் விரும்பாமல் பிறிதொரு செலவு குறைந்த சாதாரண வீட்டில் சாதாரண வாழ்க்கை வாழும் இன்றைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நாளைய தலைவர்களான உங்களுக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டாக அமைகின்றார்.

ஆகவே நாளைய தலைவர்களான நீங்கள் உங்கள் எண்ணங்களையும், நடைமுறைகளையும் நல்லதாய் எண்ணுமாறும் ஒவ்வொரு நடைமுறையும் நாடும் நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், அவர்களுக்கான முன்மாதிரியானதாகவும் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுத பாணி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சாரண தலைவர்களால் முதலமைச்சருக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.

இன்று ஆரம்பமான இந்த சாரணர் ஜம்போரி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.இதில் இலங்கையில் 25 மாவட்டங்களில் இருந்தும் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.