மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா சங்காபிசேகம்


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிசேக தின மணவாளக்கோல மஹா சங்காபிசேகம் இன்று புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகிய முன்றினையும் ஒருங்கேகொண்டு நீண்டகால வரலாற்று சிறப்பினைக்கொண்ட ஆலயத்தின் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மஹா கும்பாபிசேக தினத்தினை குறிக்கும் வகையில் இந்த மஹா சங்காபிசேகம் நடைபெற்றுவருகின்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவாச்சரிய கேசரி சிவப்பிரம்ம ஸ்ரீஇரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் 1008 சங்குகளைக்கொண்ட மணவாளக்கோல சகஸ்சிர மஹா சங்காபிசேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

காலை விசேட வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளுக்கும் விசேட வேதபராயணங்கள் நடைபெற்று விசேட யாகபூஜையுடன் கும்ப பூஜையும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் சங்குகளினாலும் அபிசேகம் செய்யப்பட்டது.

இதன்போது விசேட பூஜைகள் மற்றும் தேவபராயணங்கள் நடைபெற்றதுடன் தாளமேள கச்சேரிகளும் நடைபெற்று இறுதியான அன்னதானம் வழங்கப்பட்டது.