மட்டு.தாழங்குடாவில் போக்குவரத்துச்சபை பஸ் மீது தாக்குதல்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் தாழங்குடாவில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பஸ் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7.30மணியளவில் தாழங்குடா கல்வியியல் கல்லூரிக்கு முன்பாக வைத்து இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் மீது சோடா போத்தல்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது பஸ் சாரதியான கல்லடியை சேர்ந்த ரி.யோகராஜா என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுகாயங்களுக்கு உள்ளான ஏனைய இருவரும் சிகிச்சையின் பின்னர் நேற்று இரவு வீடு சென்றுவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனை சென்று வாழைச்சேனைக்கு திரும்பிக்கொண்டிருந்த பஸ் வண்டி மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் போட்டியின் காரணமாக இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.