யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மட்டக்களப்பை சேர்ந்தவர் நியமனம்

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான மட்டக்களப்பினை சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பதவியை நாளை காலை பொறுப்பேற்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நிலவிவரும் குற்றச் செயல்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்திற்கு தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக் கப்பட்டுள்ளார்.

இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம் நன்னடத்தைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 1982களில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களில் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றியிருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் முதலாவது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஐ.ரி.கனகரட்ணத்தின் மருமகனே ஸ்ரனிஸ்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் சேவையில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர் மட்டக்களப்பை சொந்த இடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.