பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற மட்டு.புன்னைச்சோலை பத்திரகாளி தீமிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஐந்தாம் திகதி ஆரம்பமானது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வீதியுலாவும் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் மகிமையினையும் கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் விளங்கிவருகின்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகைதந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததுடன் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபையினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளும் செய்யபட்டிருந்தது.