பாசிக்குடாவில் மீன்வாடி தீப்பிடிப்பு –பத்து இலட்சம் ரூபா சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா பகுதியில் உள்ள மீனவரின் மீன்வாடி ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீப்பிடிப்பு காரணமாக குறித்த மீன்வாடியில் இருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அழிந்துள்ளதாக குறித்த வாடியின் உரிமையாளரினால் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குறித்த வாடியில் இருந்தவர்கள் மீன்பிடிக்கச்சென்ற சமயம் இந்த தீப்பிடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது மின் ஒழுக்கினால் ஏற்பட்டா அல்லது உள்ளிருந்த காஸ் சிலிண்டரின் வெடிப்பினால் ஏற்பட்டதா வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.