மலேசிய அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசியா சர்வதேச வியாபார கைத்தொழில் அமைச்சர் டாக்டர். முஸ்தபா முகம்மட் அவர்களுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில்; கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான வியாபார உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், இலங்கையின்  பல்வேறுபட்ட முதலீடுகளில் கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குவதில் மலேசியாவினுடைய பங்களிப்பு கோருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே, இலங்கையினுடைய தொலைத்தொடர்பு துறையில் மலேசியாவின் டயலொக் நிறுவனம் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பை இதன் போது பாராட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், எதிர்காலத்தில் கைத்தொழில் துறையில் வாகன உற்பத்தி செய்தல் உட்பட பல்வேறுபட்ட கைத்தொழில் துறைகளுக்கு மலேசியாவின் ஆதரவு – அனுபவத்தை இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் மலேசிய சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம், மிடா நிறுவனத்தின் தலைவர் உட்பட  பல்வேறுபட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.