மட்டு - மகாஜன கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து மேற்கொள்ளப்படவிருந்த ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் தாக்கியதாக தெரிவித்து இன்று மேற்கொள்ளப்படவிருந்த  ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்தார் .

 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கடமையாற்றும்  ஆசிரியரும் ,மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க கிளைச்செயலாளருமான  பொன்னுத்துறை  உதயரூபன் ஆசிரியர் கடந்த  21.05.2016  சனிக்கிழமை காலை பத்து மணியளவில் பாடசாலையில்  மேலதிக வகுப்பு நடத்திக்கொண்டிருந்த வேளையில் பாடசாலைக்குள்  சென்ற பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எம் .நிலாகரன் தன்னை தாக்கியதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் .

முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த நபரை பொலிசாரினால் கைதுசெய்யப்படாததை கண்டித்து  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டேன்லி தலைமையில் இன்று மதியம் ஒரு மணியளவில்   மட்டக்களப்பு மகாஜன கல்லூரிக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  மேற்கொள்ளப்படவிருந்த நிலையில்  குறித்த நபர் இன்று காலை மட்டக்களப்பு பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்  .  

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கண்டன  ஆர்பாட்டம் இடம்பெறவிருந்த இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டிஹாரச்சி   குறித்த நபர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கிய உறுதிமொழிக்கு அமைய ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டேன்லி தெரிவித்தார் .


இடம்பெறவிருந்த கண்டன ஆர்பாட்ட   நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் , மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ,திருகோணமலை மாவட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் வருகை தந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது .