கிழக்கு பல்கலைக்கழக மாணவன் பெரும்பான்மையின மாணவர்களினால் தாக்கப்பட்டார்

தனது முகநூலில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றை தரவேற்றிய கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் மீது சில பெரும்பான்மையின மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இன்று மாலை கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்த்தக முகாமைத்துவ இரண்டாம் வருட மாணவனான சுமேஸ்காந் (22 வயது) என்ற மாணவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் கருத்து தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கு வருகைதந்த சில மாணவர்கள்,முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அடையாளப்படுத்திய புகைப்படம் ஒன்றைக் காட்டி இது உன்னுடைய முகநூலா என்று என்னை சூழ்ந்து கொண்ட சில பெரும்பான்மையின மாணவர்கள் கேட்டபோது,ஆம் இது என்னுடைய முகநூல்தான் என கூறினேன்.

அப்போது, அதில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படத்தை உடனடியாக அழிக்க வேண்டும் எனக் கூறி என்னைத் தாக்கினார்கள்.

என்னிடம் இப்போது அதனை அழிக்ககூடிய வசதி இல்லை என நான் கூறியபோது, அதனை நீ அழிக்காவிட்டால் உன்னை பரீட்சை எழுதவிடமாட்டேன் என்று கூறி என்னை தாக்கினார்கள். என தாக்கப்பட்ட மாணவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.