தேர்தல் ஆணைக்குழுவின் உபாயமூல செயற்றிட்டம் தொடர்பில் அறிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில்

தேர்தல்கள் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழுவாக மாற்றியமைக்கப்பட்டதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் உபாயமூல செயற்றிட்டத்தினை தயாரிக்கும் நடவடிக்கையின் கீழ் பொதுமக்களின் ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் கிழக்கு மாகாண மக்களின் கருத்தினை அறியும் வகையில் முதல் கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முகமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் ரி.சுசீந்திரன் மற்றும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் கணக்காளர் உட்பட தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீன்பிடி சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வஜன வாக்குரிமையினை வலிமையானதாகவும் முழுமையான சுதந்திரம் கொண்டதாக மாற்றியமைக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் தேர்தல் ஆணைக்குழு நிறுவப்பட்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கான உபாயமூல செயற்றிட்டத்தினை தயாரிக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுவருகின்றது.

இதற்காக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளைப்பெற்றுவருவதுடன் அது தொடர்பில் பொதுமக்களையும் விழிப்பூட்டிவருகின்றது.