போயாதினத்தில் 25மதுபானபோத்தல்கள் கொண்டுசென்றவருக்கு களுவாஞ்சிகுடியில் அபராதம்

வெசாக் தினத்தின்போது 25 மதுபான போத்தல்களைக்கொண்டு சென்றதாக கைதுசெய்யப்பட்ட நபருக்கு நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தது.

வெசாக்தினத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போதே கடந்த சனிக்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

வெசாக் தினத்தில் மதுபான நிலையங்கள் பூட்டப்பட்டு மதுபான விற்பனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட குறித்த மதுபானபோத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதனை கொண்டுசென்றவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபர் நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 10ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.