படுகொலைசெய்யப்பட்ட நடேசனின் 12வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இனந்தெரியாதேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு, பிள்ளையாரடி மன்றேசா வீதியிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கக்கட்டத்தில்இந் நிகழ்வு நடைபெறவுபுள்ளதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்றது.

ஜு.நடேசன், நெல்லை நடேசன், என பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் ஜி.நடேசனின் 12ஆவது ஞாபகார்த்த நினைவுப்பேருரை நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்பு நண்பர்கள், புத்திஜீவிகள் உரையாற்றினர்.

2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்கட்கிழமை நடேசன், தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1991ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் வீரகேசரி, சக்தி மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிலும் கடமையாற்றிய நடேசன் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட போது மாகாணசபையின் தகவல் உதவி பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை விட்டு அப்போதைய முதலமைச்சர் வரதராசபெருமாள் தலைமையிலானவர்கள் இந்தியாவுக்கு கப்பல் ஏறி சென்ற போது நடேசன் அவர்களுடன் செல்லாது மட்டக்களப்புக்கு வந்திருந்தார். அதனையடுத்து ஊடகப்பணியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜீ.நடேசன் 2004ஆம் ஆண்டில் கொல்லப்பட்டபோதும் அவரது கொலை தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியரும் தமிழ்தந்தியின் பிரதம ஆசிரியருமான வி.தேவராஜன் சிறப்புரையாற்றியதுடன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நடேசனின் படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரியும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மட்டக்களப்பில் நடாத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.