மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வீட்டின் மீது நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இந்த தாக்குதலை நடாத்திவிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

வீட்டின் முன்பகுதியில் வெளிச்சம் தெரிவதை அவதானிpத்து வெளியில் வந்துபார்த்தபோது அலுவலக வாகனத்தின் பின்புறம் பூட்டியுள்ள டயர் எரிந்துகொண்டிருந்ததாகவும் அதனை உடனடியாக அனைத்ததாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

இதன்போது ஸ்தலத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சொக்கோ பொலிஸார் மற்றும் பொலிஸ் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் இருந்து இரண்டு போத்தல்களில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை நிரப்பப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மிளகாய் தூள் பொதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.