நல்ல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள் என்றால் அந்த இடம் பாடசாலை என்பதை விட முன்பள்ளி என்பது தான் உண்மையான விடயம்

(லியோ)

இந்த சமூகத்தில்   நல்ல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள் என்றால் அந்த இடம் பாடசாலை என்பதை விட முன்பள்ளி என்பது தான் உண்மையான விடயம்  என முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில்
  மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தினால்  முதல் முறையாக  முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் நாடளாவிய ரீதியல் இடம்பெற்றுவருகின்றன .


இதன் கீழ்  மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின்  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 10  முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது .

இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில்  மட்டக்களப்பு  பிரதேச செயலக மட்டத்தில்  பத்து முன்பள்ளி   மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் , உதவி மாவட்ட செயலாளர்  எஸ் . ரங்கநாதன் , மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி  இணைப்பாளர் வீ .முரளிதரன் மற்றும்  பிரதேச செயலக மட்ட  முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .  

இந்நிகழ்வில் உரையாற்றிய  மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில் சிறுவர்களுக்கு கற்பித்தலுக்கான உபகரணங்கள் என்பது மிக முக்கியமானது .

அவை இல்லாமல் நடத்தப்படுகின்ற கற்றல் நடவடிக்கைகள் , அவர்களுடைய உள, உடல் ஆற்றல்களை வளர்ப்பதற்கு பாதகமாக  அமைகின்றது .    

இந்த கற்றல் உபகரணங்கள் ஊடாக சிறுவர்களின் உள வளர்ச்சியினை சரியாக நெறிப்படுத்த படுகின்றது .

முன்பள்ளி ஆசிரியர்கள் என்ற துறை என்பது இலங்கையை பொறுத்த வகையில் முக்கியம் பெறாத விடயமாக காணப்படுகின்றது .

ஆனால் ஏனைய நாடுகளிலே நிபுணத்துவ பெற்ற துறையாக கருதுகிறார்கள் .

இத்துறையானது குழந்தைகளின் உளவியலை பயிற்றுவிப்பவர்களாக கருதுகின்றனர் .

எனவேதான் இத்துறை நிபுணத்துவ பெற்ற துறையாக கருதப்படுகின்றது . ஒரு குழந்தையின்  மூளை தனது ஐந்து வயதுக்குள்தான் முழுமையாக வளர்ச்சியடைகிறது .

எனவே இந்த கற்றல் செயல்பாடுகள் அவர்களுடைய உள உடல் ஆற்றல்கள் அனைத்து  வளர்ச்சிகளையும்  கூடுதலாக ஏற்படுத்துகிறது .
எனவே இந்த சமூகத்திலே  நல்ல பிரஜைகள் உருவாக்கப்படுகின்றார்கள் என்றால் அந்த இடம் பாடசாலை என்பதை விட முன்பள்ளி என்பதுதான் உண்மையான விடயம் .


எனவே  முன்பள்ளி சிறுவர்களின் கற்றல் செயல்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமான விடயமாக அமைகிறது  என  தெரிவித்துக்கொண்டார் .