மோசாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 88வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா

மட்டக்களப்பு நகரின் மோசாப்பிட்டி வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 88வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(03)சிறப்பாக நடைபெற்றது.

 நேற்று ஞாயிற்றுக்கிழமை(03) பிற்பகல் 3.00மணியளவில் பயனியர் வீதியில் உள்ள வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழக மைதானத்தில் இந்த விளையாட்டு விழா நடைபெற்றது.

வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஈ.வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா), கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய தலைவர் செ.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கௌரவ,சிறப்பு அதிதிகளும் கலந்துகொண்டதுடன் பாரம்பரிய விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன.

வை.எம்.ஏ.சி.விளையாட்டுக்கழகத்தின் 88வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் நேற்று காலை 7.00மணிக்கு 52மைல் தூரம் கொண்ட சைக்கிள் ஓட்ட நிகழ்வும் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து பிற்பகல் சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், உத்தியோகத்தர்களுக்கான 20க்கும் மேற்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.