சிறுமிக்கு சூடு மே 2 வரை விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டார்.


இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று (25) திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறுமியின் தந்தை மஜீத் றப்பாணி மற்றும் வளர்ப்புத் தாய் மும்தாஜ் ஆகிய இருவருக்கும் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை மீண்டும் 07 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.

தரம் 5இல் கல்வி கற்கும் 10 வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்படத்தக்கது.