கல்லடி பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 10.00மணியளவில் ஏறாவூரில் இருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும் கல்லடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த அந்தோனிமுத்து விமலதாஸ்(50வயது)அவரது மனைவி திருமதி அனுஸியா விமலதாஸ் மற்றும் அவர்களது பிள்ளைகளான வி.ஜயந்தன்(17வயது), வி.டிலகஸனா(08வயது) மோட்;டார் சைக்கிளில் பயணம்செய்த கல்லடியை சேர்ந்த கந்தசாமி சிவகுமார்(49)வயது ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.