பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து –08ஆம் திகதி தொடக்கம் இருண்ட நாட்கள் பிரகடனம்

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை கண்டித்து சர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ஆம் திகதி தொடக்கம் “இருண்ட நாட்களாக” பிரகடனப்படுத்துவதாகவும் அன்றைய தினம் வீடுகள் வர்த்தக நிலையங்களில் கறுத்த கொடிகள் ஏற்றுமாறும் கறுப்பு பட்டிகளை கறுப்பு உடைகளை அணியுமாறும் ஒன்றிணைந்த பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ  பெண்கள் கூட்டமைப்பு, வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு, பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு என்பன இணைந்து இந்த வேண்டுகொளை விடுத்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெண்கள் தினமான பங்குனி(மார்ச்)08 இணையும் இந்த முழு மாதத்தினையும் நாம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருண்ட நாட்களாக பிரகடனம் படுத்துகின்றோம்.

பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும், சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும் கொலைகளும் மிகவும் மோசமான முறையில் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதாலும்,  இந்த வன்முறைகளுக்கான நீதி இதுவரை கிடைக்காததாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போனதாலும் பெண்களுக்கான தினமாகிய பங்குனி 8 இனையும் இந்த முழு மாதத்தினையும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் “இருண்ட நாட்களாகப்”; பிரகடனப்படுத்துகின்றோம்.

வன்முறைக்குட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களும் குடும்பத்தினரும் அவர்களது  உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களும் நீதிக்காக காத்திருந்து நம்பிக்கை இழந்து விட்டோம். யாழ்ப்;பாணம் புங்குடுதீவில் 2015 இல் 15 வயதான மாணவி  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி நாடு முழுவதும்  மக்கள் எழுச்சி கொண்டும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. மட்டக்களப்பில் 2009 இல் 24 வயதான பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செயயப்பட்டமைக்கு நீதியை கோரி அவரின் தாய் இன்று வரை அலைந்து கொண்டிருக்கின்றார். ஹற்றனில் (ஏப்ரல் 2015) 5 வயது சிறுமி பாலியல் வல்லுறவு, புத்தளத்தில் (ஜனவரி 2016) 26 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சி, கம்பகாவில் (பெப்ரவரி 2016) 18 வயதான பெண் பாலியல் வல்லுறவு, கம்பளையில் (பெப்ரவரி 2016) 7 மாத குழந்தையின் தாய் 10 பேரால் பாலியல் வல்லுறவு, வவுனியாவில் (பெப்ரவரி 2016) 14 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை என வன்முறைகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

நாம் ஒருபோதும்,

•பெண்களுக்கெதிரான வன்முறைகள் எமது சமூகத்தில் நிகழ அனுமதிக்க மாட்டோம்
•பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களாக நாங்கள் இருக்க மாட்டோம்
•பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற அனுமதிக்க மாட்டோம்
•பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிரான நீதி கிடைக்கும் வரை நாம் ஓய மாட்டோம்
என்பதைக்காட்ட எமது வீடுகளிலும், கடைகளிலும் அலுவலகங்களிலும்
பங்குனி 8 இல் கறுப்புக் கொடிகளை ஏற்றுவோம் பங்குனி 8 இல் கறுப்பு உடைகள், கறுப்புப் பட்டிகளை அணிவோம்இனிவரும் நாட்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற சமூகம் காண்போம்.

அனர்த்த முகாமைத்துவ  பெண்கள் கூட்டமைப்பு,இல.55, லேடி மன்னிங் றைவ்,மட்டக்களப்பு
வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு
3ஆம் ஒழுங்கை, மன்னார் வீதி, நெல்லுக்;குளம், வவுனியா பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு 202, 8ஃ3, சில்வா மாவத்தை, கொழும்பு 6