இலங்கையில் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் - மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா

இலங்கையில் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் அதிகளவில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குவதாக மின்சக்தி எரிபொருள்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.


எதிர்வரும் சித்திரைபுத்தாண்டுக்கு முன்பாக இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின்வழங்கல் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இருள் அகன்று முழு நாடும் ஒளிமயம் தேசிய மின் வழங்கல் செயல்திட்டம் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மின் சக்தி எரி சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா , கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கைத்தொழில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசகர் கணேச மூர்த்தி மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் 25000ஆயிரம் பேர் உள்ளதாகவும் இவர்களில் 2080பேரின் கிராமத்திற்கே மின்சாரம் கிடைக்காத நிலையுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,

நாங்கள் கிராமத்துக்கு மட்டும் மின்சாரத்தினை வழங்கிவிட்டு மின்சாரம் வழங்கிவிட்டோம் என்றுகூறிவந்தோம்.ஆனால் அந்த மின்சாரம் வீட்டுக்கு வழங்கப்படவில்லை.ஆனால் அதனை இன்று நாங்கள் செய்வதற்கு முன்வந்துள்ளோம்.இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இன்று வறிய மக்கள் பலர் மின்சாரம்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் உள்ளனர்.அவர்களும் அந்த மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளோம்.வீட்டுக்கு வயரிங் செய்வதில் இருந்து அவர்கள் மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதுவரையிலான செலவுகளை அரசாங்கம் வழங்கும்.வீட்டுக்கு மின்சாரத்தினைப்பெற்றுக்கொள்வதற்கு செலவுசெய்யப்படும் பணத்தினை ஆறு வருடங்களில் மாதாந்தம் 680ரூபா வீதம் குறைந்த தொகையினை மின்சார பட்டியலுடன் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.ஒரு வீட்டுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அனைத்து செலவினமாக சுமார் மூன்று இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா தேவைப்படுகின்றது.அதற்கான நிதியை நாங்கள் கொண்டுள்ளோம்.அதனை விரைவாக செயற்படுத்த அனைவரது ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.

மின்சாரங்களை வழங்கும்போது சட்டரீதியான காணி,சட்ட ரீதியற்ற காணியென்று பார்க்கத்தேவையில்லை.அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படவேண்டு.அரச காணிகளில் 10 வருடங்களுக்கு மேல் குடியிருப்போருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த திட்டம் மூலம் இதுவரையில் இலங்கையில் 115000பேருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகின்றது.