களுவாஞ்சிகுடியில் நகைக்கடையை உடைத்து கொள்ளையிட முயற்சி

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி நகரில் நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை முறையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள குறித்த நகைக்கடை உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனினும் குறித்த நிலையத்தில் தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நகைக்கடையில் இருந்த கையடக்க தொலைபேசி ஒன்றும் இரண்டு வெள்ளிக்கொலுசுகளும் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.