ஆண்களும் பெண்களும் உழைத்து பொருளாதார கௌரவத்தைப் பெற வேண்டும்- பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர்

அரச நிர்வாகப் பணியாகிலும் சரி குடும்பத்திற்கு பொருளாதாரத்தை ஈட்டித் தருகின்ற வேறு வாழ்வாதார செயற்திட்டங்களாக இருந்தாலும் சரி அதில் குடும்பத்தில் ஆண்களும் பெண்களும் உழைத்து பொருளாதார கௌரவத்தைப் பெற வேண்டும் என ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் புதிதாகப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களை வரவேற்று பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் அவர் உரையாற்றினார்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலானி ஆதித்தன் தலைமையில் நிகழ்வு திங்களன்று 04.01.2015 இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவித்ததாவது.

குடும்பத்தில் ஆணும் பெண்ணும் உழைப்பது பொருளாதார கௌரவத்தையும் தனித்துவத்தையும் பெற்றுத் தருவதோடு சிறந்த மனித வளத்தைப் பாவிப்பதனூடாக தேசிய உற்பத்திக்கும் பங்களிப்புச் செய்ய முடியும்.

இலவசமாக இங்கு பயிற்சி வழங்கப்படுவதோடு  பயிலுநர் ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு தலா 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. அத்துடன் டிப்ளோமா தரத்தில் தையல், சமையல், அலங்காரம், கம்பளி வேலைப்பாடுகள், கைப்பணிகள் போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் ஏதாவதொன்றில் நீங்கள் புலமை காட்டி உங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிவதோடு நீங்கள் எதிர்காலத்தில் தொழில் வழங்குநர்களாகவும் மாறமுடியும்.

அறிவையும் திறனையும் பெற்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு இப்பொழுது அரசு பல திட்டங்களினூடாக உதவுகின்றது. எனவே இந்த அரிய வாய்ப்பை ஏழை யுவதிகளாகிய நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்’.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சினி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலானி ஆதித்தன், போதனாசிரியை ஆர். நிவேதிகா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ரூபா உட்பட பயிலுநர்களான 40 யுவதிகளும் கலந்து கொண்டனர்.