மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்கவித்துவான் வேல்முருகு சிறிதரன் காலமானார்

மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்கவித்துவான் வேல்முருகு சிறிதரன் கடந்த (27) அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு லேக்வீதியிலுள்ள அவரது வீட்டில் இருந்தபோதே  அதிகாலை 6 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகள் இன்று  வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடைபெறவுள்ளது.


இதேவேளை இவர் விரிவுரையாளராக பணியாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு இவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு. விரிவுரையாளர்களின் மரியாதை அணிவகுப்புடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இவரது உடல் வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்க வித்துவான் வேல்முருகு சிறிதரன் அவர்களை இன்று இம்மண் இழந்து நிற்கின்றது. இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் திரு.திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார்.

இவர் தனது தந்தை திரு.வேல்முருகு அவர்களை ஆரம்ப குருவாகக் கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார். தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ.எஸ். இராமநாதன் அவர்களிடம் பலவருடகாலம் மிருதங்கக் கலையினை சிறப்புறக்கற்றுத் தேர்ந்தார்.
தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார். பின்னர் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார்.. பின் 2001ஆம்ஆண்டில் இருந்து மிருதங்க போதனாசிரியராகவும், 2005ஆம்ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். இக் காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டுவந்தார். கடமைபுரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலும,; இசை, நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் இவர் தனது திறமைமிக்க பங்களிப்பை ஆற்றிவந்தார்.
வேல்முருகு சிறிதரன் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார.; இலங்கை கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை வந்த நடனகலை ஞரான திருமதி உமா ஆனந்த் அவர்களின் நடனநிகழ்விற்கும் அணிசேர் கலைஞராக பங்களிப்புசெய்தார். இவர் வட இலங்கை சங்கீத சபையினால் வழங்கப்பட்ட கலாவித்தகர் பட்டத்தினையும், இந்துக்கலாசார இந்துசமய தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சரான திருசி. இராஜதுரை அவர்களால்; “லய இசைச்செல்வன்” என்ற பட்டத்தினையும், கல்லாறு சத்தியசாயிபாபாசபையினால்“சர்மவாத்தியகலாபதி” எனும் பட்டத்தினையும், மிருதங்கசாகரம், மிருதங்கக்கலைமாமணி, போன்ற பல பட்டங்களையும் பெற்றமிருதங்கக் கலைஞராவார். இவர்மட்டக்களப்பில் தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற இசைவிழாக்கள், நிகழ்வுகளில் மட்டுமல்ல சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும். இன்று நாம் இக்கலைஞரை இழந்தமையானது ஈடுசெய்யமுடியாத ஓர பேரிழப்பாகும். இவரது இடத்தை நிவர்த்தி செய்யமுடியாத நிலைமையானது மிகவும் மனவேதனைக்குரிய தொன்றாகும்.